வாசன் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''வன்முறையில் நம்பிக்கை இல்லை என ஜி.கே.வாசன் கூறி வருகிறார். ஆனால், அவரது ஆதரவாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சக்கரபாணி ரெட்டியார், மாவட்டப் பொறுப்பாளர் சிவராமன் ஆகியோர் பயணம் செய்த காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தால் அவர்களுக்கு நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம்.
காவிரியின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும். கிருஷ்ணசாமி வாண்டையார் போன்ற காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் பங்கேற்பார்கள். இந்தப்பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பேசியுள்ளேன். விரைவில் அவரை நேரில் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழகப் பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், அணையைப் பாதுகாக்கவும் தொழில் பாதுகாப்புப் படையின் மூலம் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment