இந்தியாவில்
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர
ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என பா.ம.க.நிறுவனர்
ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பூரண மதுவிலக்கு நீராதார திட்டங்களை போர்க்கால
அடிப்படையில் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு
வருகிறது.
பா.ம.க. நிறுவனர்
ராமதாஸ் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.
பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
“1957ம் ஆண்டு முதல் மதுவிலக்கு
கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால்
இன்னும் அது நடந்தபாடில்லை. 2016 சட்டமன்ற
தேர்தலுக்கு பின்னர் நிச்சயம் மதுவிலக்கு
அமலுக்கு வரும். அப்போது தமிழகத்தில்
பா.ம.க. ஆட்சிப்பொறுப்பில்
இருக்கும். அண்டைமாநிலங்கள் எல்லாம் நீராதாரங்களை
மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி
வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீராதாரங்களை
மேம்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு
மேற்கொள்ளவில்லை.
ஆந்திராவில்
ராஜசேகரரெட்டி ஆட்சியின்போது, நீராதாரங்களை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி
ரூபாய் ஒதுக்கியது. ஆனால் தமிழக அரசு
இதனை கண்டுகொள்வதாக இல்லை. முல்லைபெரியாறு அணை
பிரச்னை உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை
விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என
கலைஞரும், நானும் தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறோம். நாங்கள் சொன்னோம் என்ற
காரணத்துக்காகவே கூட்டத்தை கூட்ட மாட்டார்கள் ” என்று
கூறினார்.
தொடர்ந்து
பேசிய ராமதாஸ் “தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக ஆட்சி நடக்கிறதா என
சந்தேகமாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக
பொறுப்பேற்றது முதல் எந்த பணிகளும்
நடைபெறவில்லை. பன்னீர்செல்வம் நல்லவர். ஆனால் அவர் வல்லவராக
செயல்பட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. தேவையற்ற அதிகார மையங்கள் உருவாக்கப்பட்டு
அவர் செயல்பட முடியாத சூழல்
நிலவுகிறது.
தர்மபுரியில்
பச்சிளம் குழந்தைகள் இறப்புக்கு காரணம் அங்கு மருத்துவமனைகளில்
போதிய வசதிகள் இல்லாததே. அன்புமணிதான்
தர்மபுரியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தார். ஆனால்
அங்கு போதிய வசதிகள் மேம்படுத்தப்படவில்லை"
என்றார்.
ரஜினிகாந்த் குறித்த
கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் “இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு
வரலாம். அரசியலுக்கு
வர அவருக்கு ( ரஜினிகாந்த்) உரிமை
உள்ளது ” என்றார்.
தமிழகத்தில்
திராவிட கட்சிகள் மதுவிற்பனையை ஊக்குவித்து வருகிறது. 2016 ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி
அமையும். அப்போது ஒரு சொட்டு
சாராயம் கூட இல்லாத நிலை
வரும் என ராமதாஸ் மேலும்
கூறினார்.
உண்ணாவிரதப்போராட்டத்தை
இன்று மாலை காந்திய மக்கள்
இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்
நிறைவு செய்து வைக்கிறார். இதில்
விவசாய சங்க நிர்வாகிகள், அரசியல்
கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment