பிக்பாக்கெட் அடித்த போது கையும் களவுமாக பிடிபட்ட திருடன் தன்னை அரவிந்த் கேஜ்ரிவால் என்று கூறி, போலீசாரை மிரட்டிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி ஆனந்த் விகார் பகுதியிலுள்ள பஸ் டெப்போவில் நடுத்தர வயதுள்ள ஒரு நபர் பயணிகளிடம் நைசாக பிக்பாக்கெட் அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஒரு பயணி அந்த திருடனை மடக்கி பிடித்து, பிற பயணிகள் உதவியுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து பார்த்தபோது, பிக்பாக்கெட் திருடன் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை போன்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பதை பார்த்து வியந்தனர்.
இதை சாதகமாக்கிக் கொண்ட திருடன், தன்னை அரவிந்த் கேஜ்ரிவால் என்று சாதித்தார். சாமானிய வாழ்க்கையை வாழும் நோக்கிலேயே பஸ்களில் பயணிப்பதாகவும், எனவேதான் பஸ் நிலையம் வந்ததாகவும் கூறியதை கேட்டு போலீசாரே ஒரு நிமிடம் குழம்பி போயினர். இருப்பினும் அடையாள அட்டை உள்ளிட்ட பிற விவரங்களை தருமாறு போலீசார் கேட்டபோது, அந்த நபர் திருதிருவென விழிக்க தொடங்கினார்.
இதையடுத்து போலீசார் பிக்பாக்கெட் திருடனை கைது செய்தனர். ஆனால், தன்னை கைது செய்தால் அதிகாரத்தை பயன்படுத்தி உங்களை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று அந்த நபர் போலீசாரை பார்த்து மிரட்டியுள்ளார். கோபமடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய வகைகளில் விசாரித்ததில், திருடனின் பெயர் அரவிந்த் ஷர்மா என்பதும், வடகிழக்கு டெல்லியின் ஹர்ஷ் விகார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
No comments:
Post a Comment