விஜய் சேதுபதி நடிப்பில், ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில்
தொடங்கப்பட்ட படம் 'வசந்தகுமாரன்'. இன்று
முதல் படப்பிடிப்பு என்று விளம்பரம் செய்தார்கள்.
அட்வான்ஸ் தொகை வாங்கிவிட்டு, பிறகு
கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் விஜய்
சேதுபதி என்று சுரேஷ் புகார்
தெரிவித்தார்.
இந்நிலையில்
கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதால் எனக்கு
நிறைய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால்
எனது தயாரிப்பு நிறுவனத்தினை மூடப் போகிறேன் என்று
அறிவித்தார் சுரேஷ்.
இதனைத்
தொடர்ந்து பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. சில நாட்களுக்கு முன்பு
நடைபெறுவதாக இருந்த சுரேஷின் பத்திரிக்கையாளர்
சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து பிரச்சினை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகன.
முதன் முறையாக இப்பிரச்சினை தொடர்பாக
விஜய் சேதுபதி அறிக்கை ஒன்றை
வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர்
கூறியிருப்பது:
"ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ
9 என்ற நிறுவனத்தில் 'வசந்தகுமாரன்' என்ற திரைப்படத்தில் நான்
நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேஷின் தவறுதலான நடவடிக்கைகளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின்
காரணமாகவும் நான் 'வசந்தகுமாரன்' திரைப்படத்திலிருந்து
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே
விலகி கொள்வதாகவும், நான் வாங்கிய 9 லட்சம்
ரூபாய் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து
தருவதாகவும் அன்றே கூறிவிட்டேன்.
ஆனால்,
சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு
தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும், சில மர்மநபர்கள்
மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து
கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர்
சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார்
அளித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர்
சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட
நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்த
பொழுது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து
'வசந்தகுமாரன்' திரைப்படத்திலிருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக்
கொண்டேன்.
இதே கருத்தை வலியுறுத்தி நடிகர்
சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம்
ஒன்றையும் கொடுத்துள்ளேன். இந்நிலையில், இன்றைய தினம் தமிழ்
நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக
'வசந்தகுமாரன்' திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இது போன்ற செயல்கள் எனது
வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன்.
நான் தற்போது ஜனநாதன் இயக்கத்தில்
'புறம்போக்கு' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தொடர்ந்து தனுஷ்
தயாரிப்பில் 'நானும் ரவுடி தான்'
படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இந்நிலையில் 'வசந்தகுமாரன்' திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை
கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு
ஆளாகி உள்ளேன்.
இது போன்ற செயல்களில் ஸ்டூடியோ
9 நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால்
அவர் மீது சட்ட ரீதியாகவும்,
தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தால்
காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்
சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற
நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்" என்று
அந்த அறிக்கையில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment