தமிழ் திரைப்பட இயக்குநர் ருத்ரையா உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தவர் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கென முதன்முதலாக தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்த ருத்ரையா 1980 ஆம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த 'கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் ஈர்த்தவர். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் ருத்ரையா.
ருத்ரையாவுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. ருத்ரையாவின் இறுதிச் சடங்குகள் இன்று (நவ.19) சென்னையில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment