போகிற ஊரில் எல்லாம் திருட்டு டிவிடி விற்கிறார்களா என்று ரெய்டு செய்வது விஷாலின் வழக்கமாகிவிட்டது. சமீபத்தில்கூட திருப்பூர் சென்ற போது கத்தி, பூஜை படங்களின் டிவிடிகள் விற்றவரை அதிரடியாக கடை புகுந்து மிரட்டினார். பிறகு போலீஸ் வந்து சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர்.
விஷாலின் திடீர் ரெய்டால் திருட்டு டிவிடி விற்பவர்களைவிட போலீசார்தான் கடுப்பாகியுள்ளனர். நம்ம வேலையில் அவர் ஏன் மூக்கை நுழைக்கிறார் என சில உயர் அதிகாரிகள் கடுப்பானதாகவும், விஷாலை அழைத்து, இந்த போலீஸ் வேலையெல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரித்ததாகவும் வதந்தி.
இந்நிலையில் திருட்டு டிவிடி ஓழிப்பு குறித்த திரையுலக கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய விஷால், நான் சட்டத்தை கையில் எடுக்கவில்லை. திருட்டு டிவிடி விற்பதை அறிந்தால் முதலில் போலீஸுக்கும் பிறகு பத்திரிகைகளுக்கும் தகவல் தந்துவிடுவேன். எதுவாக இருந்தாலும் அது போலீஸின் முன்னிலையில்தான் நடக்கும். அதற்கு வீடியோ ஆதாரமும் உள்ளது என்றார். மேலும், தயாரிப்பாளராக திருட்டு டிவிடியை ஒழிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்றும் கூறினார்.
திருட்டு டிவிடிக்கு எதிராக ஆவேசம் கொள்ளும் நடிகர்கள், தங்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது ஐம்பது ரூபாய் டிக்கெட்டை இருநூறும், முந்நூறுக்கும் விற்கும் திரையரங்குகளின் டிக்கெட் கொள்ளை குறித்து வாயே திறப்பதில்லை.
தளபதி ஸ்டைலில் சொன்னால், முதல்ல அவங்களை நிறுத்த சொல்லுங்க, திருட்டு டிவிடியில் படம் பார்ப்பதை மக்களும் நிறுத்திக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment