லிங்கா
திரைப்படத்தின் கதை திருடப்பட்டது கிடையாது
என்றும், இந்த வழக்கில் தனது
பெயரை வேண்டுமென்றே மனுதாரர் சேர்த்திருப்பதாகவும், ஹைகோர்ட் மதுரை கிளையில் நடிகர்
ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல்
செய்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்,
ரஜினிகாந்த் நடித்து அடுத்த மாதம்
வெளிவர உள்ள திரைப்படம் லிங்கா.
ஆனால் மதுரை சின்னசொக்கி குளத்தைச்
சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இப்படம்
தொடர்பாக ஒரு மனு தாக்கல்
செய்திருந்தார்.
அதில், "எனது 'முல்லைவனம் 999' என்ற
திரைப்படத்தின் கதையை திருடிதான் லிங்கா
படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே திரைப்படத்திற்கு தடை
விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையைத் திருடியது
சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும்
லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு
செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது.
எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் படத்துக்கு தடை விதிக்க முடியாது
என நீதிபதி கூறியதை அடுத்து,
டிஜிபி, தென் மண்டல ஐஜி,
மதுரை மாநகர் காவல் ஆணையர்,
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை
செயலர், மத்திய அரசு சினிமா
பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும்
லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன்
வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர் கள் சங்கத் தலைவர்
அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,
நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நவ. 19க்குள்
பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும்
கதாசிரியர் பொன்குமார் ஆகியோர் நேற்று, 18ம்தேதி
ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
செய்தனர். ரவிக்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில்,
"முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை சார்ந்து
லிங்கா படத்தின் கதை இருப்பதால், அந்தக்கதை
என்னுடையது என மனுதாரர் கூற
முடியாது.
அவரது கதையை நான் திருடியதாக
கூறுவதை மறுக்கிறேன். பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாற்றுக்கு யாரும் உரிமை கோர
முடியாது. லிங்கா படத்தை பொறுத்தவரை
இன்னும் கதை முழுமையாக வெளியாகவில்லை.
அனைவரும்
யூகத்தில்தான் உள்ளனர். அடிப்படை கதை பொன்.குமரனுக்கு
சொந்தமானது. பொன்.குமரன் அவரது
கதையை ‘கிங்கான்' என்ற பெயரில் தென்னிந்திய
திரைப்பட கதாசிரியர் சங்கத்தில் 15.10.2010ல் பதிவு செய்துள்ளார்.
மனுதாரர்
குறிப்பிட்டது போல நாங்கள் எந்த
தவறிலும் ஈடுபடவில்லை. எனவே, அவரது மனுவை
தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று
கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ரஜினிகாந்த் இன்று
தனது பதில் மனுவை தாக்கல்
செய்தார்.
அந்த மனுவில், "படம் வெளியாகாத நிலையில்,
லிங்கா கதையை மனுதாரர் எப்படி
தெரிந்து கொண்டார்? இந்த படத்தின் தயாரிப்பாளர்,
வினியோகஸ்தர் நான் கிடையாது. நான்
நடிகன் மட்டுமே. அப்படியிருக்கும்போது எனது பெயரை வழக்கில்
இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் எனது நற்பெயருக்கு களங்கம்
விளைவிக்கும் நோக்கத்தில் எனது பெயரையும் வழக்கில்
இணைத்துள்ளார் மனுதாரர். லிங்கா கதை திருடப்பட்டது
கிடையாது. எனவே வழக்கை தள்ளுபடி
செய்ய வேண்டும்" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விசாரணை வரும் 24ம்தேதிக்கு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment