ஒரிசா மாநிலம், ஜனத்சிங்பூர் மாவட்டத்தில் போஸ்கோ என்ற மிகப்பெரிய இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
போராட்டத்தை ஒடுக்கவும், பதட்டத்தை தணிக்கவும், அந்த பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் போராட்டம் மேலும் பல பகுதிகளுக்கு பரவி வருகிறது.
இதற்கிடையே போலீசை எதிர்த்து கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்ட சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 12 நாட்களாக இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் மறியல் போன்றவற்றில் சிறுவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பின்னால்தான் பெரியவர்கள் வருகிறார்கள்.
இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இது பற்றி போஸ்கோ ஆலை எதிர்ப்பு குழுவின் தலைவர் அபய்சாகு கூறுகையில், இரும்பு தொழிற்சாலைக்காக திங்கியா கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிக்கப்படுகிறது.
இதை எதிர்த்து 6 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. மாநில அரசு போலீசாரை கொண்டு போராட்டத்தை அடக்க நினைக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலை சமாளிக்க போராட்டத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தி உள்ளோம்” என்றார்.
போராட்டத்தில் சிறுவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கு மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோர் அவர்களை அனுமதிக்ககூடாது என்று மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அஞ்சலி பெஹேரா கூறினார்.
சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜெகத்சிங்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு எஸ்.கே. சவுத்திரியும் இதில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment