யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம் என்கிற நிலைமையை உருவாக்கித் தந்து சினிமாக்கு உயிர் கொடுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு டைரக்டர் தங்கர்பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். திரைப்படத்தொழில் தொடங்கிய காலந்தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கானவர்களின் பிரச்சினையை முதல்-அமைச்சர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.
திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும். தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்-அமைச்சருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன், என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment