தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் கடைகளில் பொன்னி அரிசியை விரும்பி வாங்குவது வழக்கம். இந்த அரிசி கிலோ ரூ.22 முதல் ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் இப்போது பொன்னி அரிசி கிலோ ரூ.32, முதல் ரூ.45 வரை விற்கப்படுகிறது.
வடபழனியில் அரிசி கடை வைத்திருக்கும் செந்தில்குமார் கூறுகையில் பொன்னி அரிசி மட்டுமல்ல இட்லி அரிசி விலையும் உயர்ந்து விட்டதாக கூறினார். பாபர்ட்லா பொன்னி அரிசி கிலோ ரூ.35-க்கும், ஆரணி சிவாஜி பிராண்ட் அரிசி கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், இட்லி அரிசி கிலோ ரூ.25 முதல் ரூ.28 வரை விற்கப்படுவதாகவும் கூறினார்.
பச்சரிசி கிலோ ரூ.36 வரை விற்கப்படுகிறது. பெரும்பாலும் பொன்னி அரிசி கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு அதிகம் வருகிறது. ஆனால் இப்போது அங்கிருந்துடன் கணக்கில் பொன்னி அரிசி வெளிநாட்டுக்கு ஏற்று மதியாவதால் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவு அரிசிதான் வருகிறது. இதனால்தான் விலை உயர்ந்துள்ளது என்றார்.
இதேபோல் சூளை அரிசி கடை வியாபாரி செல்வராஜ் கூறுகையில், தமிழ்நாட்டில் விளை நிலங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுவதால் விளைச்சல் குறைந்துவிட்டதாக கூறினார். காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கட்டிடங்களாக மாறிவிட்டதை கண் கூடாக காணலாம். இது தவிர இந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் விளைச்சல் குறைந்து விட்டது.
மத்திய அரசும், வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்துள்ளதால் இங்கு தட்டுப்பாடு உருவாகி விட்டது என்றார். காஞ்சீபுரம் சன் பிராண்ட் ஆறுமுகம் கூறுகையில், காஞ்சீபுரத்தில் 125 அரிசி ஆலையும், செங்குன்றத்தில் 134 அரிசி ஆலைகளும் உள்ளன. இதில் 80 அரிசி ஆலைதான் இயங்குகிறது. அரவைக்கு போதிய நெல் வராததால் மற்ற அரிசி ஆலை மூடி கிடப்பதாக கூறினார்.
ஒரிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் நெல்வரத்தும் குறைந்து விட்டது. எனவே விளைச்சல் அதிகரித்தால்தான் இனிமேல் அரிசி விலை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment