'சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டு, ஸ்ரீரங்கம்
தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவார்'
என்ற தகவலால், சீட் கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், 'சைலன்ட்'
ஆகி விட்டனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த,
1991--96ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக,
சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு
நான்காண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு,
நான்காண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்,
கடந்த செப்டம்பர், 27ம் தேதி, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.இதனால்,
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும்,
ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரின் ஜாமின் மனுக்களும்,
கடந்த, 7 ம் தேதி பெங்களூரு உயர்நீதி மன்றத்தில், நீதிபதி சந்திரசேகரா தள்ளுபடி செய்தார்.
உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோருக்கு, வரும் டிசம்பர், 18ம் தேதிக்குள் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய
வேண்டும், என உத்தரவிட்டு, இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேல் முறையீட்டு மனுவை,
மூன்று மாதங்களுக்குள் விசாரித்து, பெங்களூரு உயர் நீதிமன்றம் உத்தர விட வேண்டும் எனவும்,
உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா
பதவி இழந்தவுடன், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்
என்ற நம்பிக்கையில், மாஜி அமைச்சர்கள், எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மற்றும், அ.தி.மு.க.,
நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பெங்களூரு சென்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க
முடியாததால், அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகள், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும்
ஆசையில் உள்ள, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்தித்துவிட்டு வந்தனர்.
ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் தொடர்பான
உத்தரவுப்படி, வரும் மார்ச் மாதத்துக்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்
நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டு, மீண்டும் தேர்தலில்
போட்டியிடுவார் என, அ.தி.மு.க., வினர் உறுதியாக நம்புகின்றனர். இதனால், ஸ்ரீரங்கம்
தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற கனவில் இருந்த, திருச்சி மாவட்ட, அ.தி.மு.க.,
நிர்வாகிகள் தற்போது சைலண்டாகி உள்ளனர்.
No comments:
Post a Comment