ஆற்காடு அருகே விஜயகாந்தையும், அவரது மனைவி லதாவையும் கடவுள்கள் போல் சித்தரித்து வைக்கப்பட்ட பேனரை அகற்றுவது தொடர்பாக போலீசாருக்கும் தே.மு.தி.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தே.மு.தி.க. சார்பில் சேலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது.
இது குறித்து வேலூரை அடுத்த ரத்தினகிரி கோவில் அருகே டிஜிட்டல் பேனர் வைத்தனர். அதில் விஜயகாந்த் படம் முருகர் வடிவிலும், அவரது மனைவி பிரேமலதா படம் தெய்வானை வடிவிலும் சித்தரிக்கபட்டிருந்தது. இந்த டிஜிட்டல் பேனர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்து கடவுளை இழிவுபடுத்துவதாக கூறி இந்து முன்னணி கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜேஸ், ரத்தினகிரி போலீஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பேனரை அகற்ற கோரி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பேனரை அகற்றும்படி தே.மு.தி.க. கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நித்யா, துணை செயலாளர் ஜெமினி ராமச்சந்திரன் ஆகியோருக்கு போலீசார் கூறினர். ஆனால் தே.மு.தி.க.வினர் பேனரை அகற்ற மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வாலாஜா தாசில்தார் சிங்காரம், இன்ஸ்பெக்டர்கள் ராணிப் பேட்டை ரவிச்சந்திரன், திமிரி மதியரசன் ஆகியோர் போலீசார் உதவியுடன் பேனரை அகற்ற முற்பட்டனர். இதனை அறிந்த தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று திரண்டு பேனரை அகற்ற விடாமல் தடுத்து நிறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து வேலூர் கிழக்கு மாவடட செயலாளர் நித்யா, துணை செயலாளர் ஜெமினி ராமச்சந்திரன் உள்பட 20 பேரை ரத்தினகிரி போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது, பேனரை அகற்ற விடாமல் போலீசாரை தடுத்தது உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் பேனரை அகற்றி போலீஸ் நிலையத்தில் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment