தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்து நடிகர் வடிவேலு வல்லம் மற்றும் தஞ்சையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் எழுச்சி, மகிழ்ச்சி, ஆரவாரம் உள்ளது. மனசு ரீதியாக உங்கள் எல்லோரையும் நான் சிரிக்க வைக்கிறேன். அது எனது வேலை. பொதுவாக மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசு வேலை. அந்த வகையில் மக்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை முதல் அமைச்சர் கலைஞர் அரசு சிறப்பாக செய்து கொடுத்துள்ளது. நான் பலமுறை உங்களை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய, பாமர மக்கள் அனைவரும் பயனடைந்து உள்ளனர். கலைஞர் பல சாதனைகளை நிறைவேற்றி உள்ளார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சியினர் காப்பி அடித்துள்ளனர். இது மக்களிடம் எடுபடாது. முதல் அமைச்சர் கலைஞர் 6வது முறையாக மீண்டும் முதல் அமைச்சராக வருவார்.
விஜயகாந்த் சினிமாவில் நல்லவர் போல் நடித்து மக்களை ஏமாற்றுகிறார். அவரது கல்யாண மண்டப தூணை இடித்து விட்டதால் கட்சி ஆரம்பித்து கலைஞரை ஒழிப்பேன் என்கிறார். விஜயகாந்திற்கு அரசியலே தெரியாது. அவர் அரசியலில் ஒரு எல்.கே.ஜி. கருணாநிதி காலேஜ். அவர் கேப்டன் என்றால், நான் டாப்டென். யாரும் யாருடைய புகழை திருடக்கூடாது. ஆனால் விஜயகாந்த் எம்.ஜி.ஆர். புகழை திருடுகிறார். அதை தட்டிக்கேட்க முடியவில்லை.
விஜயகாந்த் தனது வேட்பாளரையே அடிக்கிறார். இதனால் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அவர் கூட பிரசாரம் செய்ய பயப்படுகிறார்கள். தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி. விஜயகாந்த் எங்கு சென்றாலும் விடமாட்டேன். அவரை புழுதி புயலாய் தொடருவேன் என்றார்.

No comments:
Post a Comment