பகண்டை கூட்ரோட்டில் விஜயகாந்த் தங்கியிருந்த போது, நடிகர் வடிவேல் பிரசாரம் செய்ய அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், நேற்று பிரசாரம் செய்ய வந்த வடிவேல், காலை 11.20 மணிக்கு மணலூர்பேட்டைக்கு வந்தார். அதேநேரத்தில் முருக்கம்பாடி பகுதியில் பிரசாரம் செய்து வந்த விஜயகாந்த், மணலூர்பேட்டை வழியே பிற பகுதிக்கு செல்வதாக இருந்தது. இதனால், இருவரும் ஒரே நேரத்தில் மணலூர்பேட்டைக்கு வருவார்களோ என்ற பரபரப்பு எழுந்தது. இதற்கு இடையே பல கிராமங்கள் வழியே சென்ற விஜயகாந்த் 12 மணிக்கு மணலூர்பேட்டை வந்தார்.
வடிவேலுவை காண கூடிய கூட்டம் கலைவதற்குள் விஜயகாந்த் அங்கு வந்ததால், அவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். அதன்பின் பகண்டை கூட்ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் 12.40 மணிக்கு ஓய்வு எடுக்க தங்கினார். அவர் அங்கிருந்த அதே நேரத்தில் நடிகர் வடிவேல் பகண்டை கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே பிரசாரம் செய்ய 3.05 மணிக்கு வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தே.மு.தி.க., கட்சி தொண்டர்களும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பரபரப்பாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் இப்பகுதியில் வலம் வந்தனர். அங்கு பிரசாரம் செய்த வடிவேல் அங்கிருந்து 3.35 மணிக்கு புறப்பட்டு சென்றார். அதேபோல் ஓய்வுக்கு பின் ரிஷிவந்தியம் பொதுக்கூட்டத்திற்காக விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.
வரவழைக்க புது டெக்னிக்: ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மேலந்தல் கிராமத்தில் நேற்று காலை பிரசாரத்தை துவக்கிய விஜயகாந்த், பல்வேறு கிராமங்கள் வழியே சென்றார். தொண்டை வலியால் அவதிப்பட்ட அவர், பேசமுடியாத நிலை ஏற்பட்டதால், அனைத்து இடங்களிலும் கையசைத்தபடியே முரசு அடிப்பதுபோல் சைகை செய்து மக்களிடம் ஓட்டு கேட்டார்.
முருக்கம்பாடி கிராமத்தில் இரு ஆண் குழந்தைகளுக்கு முரசு, பிரபாகரன் என்று பெயர்வைத்து வாழ்த்தினார். பழைய கொளப்பாப்பட்டு கிராமத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மணலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வழியே விஜயகாந்த் பிரசார வேன் சென்றது.
அப்போது, சித்தப்பட்டிணம் காலனியைச் சேர்ந்த தே.மு.தி.க., தொண்டர்கள், தங்கள் ஊருக்குள் விஜயகாந்த் வரவேண்டும் எனக் கூறி, சாலையில் முட்செடிகளை வெட்டி போட்டு சாலையை மறித்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு மதிப்பளித்து, சித்தப்பட்டிணம் காலனிக்குள் சென்று விஜயகாந்த் பிரசாரம் செய்தபின் மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு பிரசாரம் செய்ய புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment