கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் முறைகேடுகள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் உள்ள 67 பொதுத்துறை நிறுவனங்களில் 40 நிறுவனங்கள் ரூ.529.09 கோடி லாபம் ஈட்டி உள்ளது. 23 நிறுவனங்கள் ரூ.11 ஆயிரத்து 924 கோடி இழப்பு அடைந்துள்ளன. இதில் மின்வாரியத்துக்கு 10,294.64 கோடியும், 8 போக்குவரத்து கழகங்களுக்கு 1,575 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ரூ.149 கோடியும், தொழில் முன்னேற்றக்கழகம் 82.84 கோடியும், தொழில் முதலீட்டு கழகம் 52.82 கோடியும், மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 64.43 கோடியும் லாபம் ஈட்டி உள்ளது.
விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரியில் (வாட்) 192.84 கோடிக்கு குறைவான வரி மதிப்பீடு மற்றும் இதர முறைகேடுகள் நடந்துள்ளன. 2010-11-ல் பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 952 ஆகும். அதில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 348 மதிப்பு கூட்டு வரி வணிகர்களும் 1,604 மதிப்பு கூட்டு வரி அல்லாத வணிகர்களும் உள்ளார்கள்.
மதிப்பு கூட்டு வரி வணிகர்களிடம் இருந்து 6,87,515 அறிக்கைகளும், மதிப்பு கூட்டு வரி அல்லாத வணிகர்களிடம் இருந்து 10,951 அறிக்கைகளும் பெறப்படவில்லை. 225 துறை அலுவலகங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 1,116 இனங்களில் ரூ.192.84 கோடி மதிப்புக்கு குறைவான வரி மதிப்பீடு மற்றும் இதர முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் தொழில், வணிகம், கல்வி நிறுவனங்களுக்காக ரூ.189 கோடி மதிப்புள்ள 6,772.54 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், நாகை, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 7,065 ஏக்கர் நீர்நிலை நிலங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கோவை, காஞ்சீபுரம், மதுரை, நீலகிரி, சேலம், தேனி, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தடையாணை பிறப்பிக்கப்பட்ட 685.70 ஏக்கர் நிலங்கள் பல்வேறு நிறுவனங்கள், மன்றங்கள் மற்றும் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
விலை மதிப்பற்ற சொத்தான நிலங்கள் பற்றிய தகவல்கள் அரசிடம் இல்லை. அரசின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment