ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பிலோ, முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த இரு கட்சிகளுக்குமே ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லை. கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவுடன்தான் காங்கிரஸ் வேட்பாளரோ அல்லது பாரதீய ஜனதா வேட்பாளரோ வெற்றி பெற முடியும்.
காங்கிரஸ் சார்பில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட சிலரது பெயர்களை பரிசீலித்து வரு கிறது. இது தொடர்பாக தி.மு.க., திரிணாமுல் காங் கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து வருகிறது.
பாரதீய ஜனதா அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்ற முடிவில் இருந்தது. ஆனால் அப்துல் கலாம் தன்னை ஒருமனதாக தேர்ந்து எடுக்க வேண்டும். போட்டியிருந்தால் வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்துல் கலாம் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்துவிட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாரதீய ஜனதாவும் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி பதவி வகித்தவர். மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
அவர் கடந்த 15-ந்தேதி சென்னை வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை ஜனாதிபதி பதவி வகித்ததில்லை. எனவே அவரை ஆதரிப்பதாக அறிவித்ததுடன் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அகாலி தளம் தலைவரும், பஞ்சாப் முதல்- மந்திரியுமான பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெலிபோனில் பேசினார்.
அப்போது முன்னாள் சபாநாயகரும், வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி ஆவதற்கு முழு தகுதி உள்ளது. எனவே அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதாவின் வேண்டுகோள் குறித்து கட்சி தலைவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். இதில் பாரதீய ஜனதா கட்சி சங்மாவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
டெலிபோனில் பேசிய ஜெயலலிதாவிடம் அத்வானி பதில் அளிக்கும்போது சாதகமான கருத்தை தெரிவித்தார் என்றும் கட்சியின் மற்ற தலைவர்களுடனும், கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலையில் பாரதீய ஜனதா தனி வேட்பாளரை அறிவித்தால் மற்ற கட்சிகள் ஆதரிக்க முன் வராது. அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே பாரதீய ஜனதா எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
காங்கிரசும், பாரதீய ஜனதாவும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் அதிகாரப்பூர்வமாக பி.ஏ. சங்மாவை அறிவித்து ஆதரவு அளித்தார்.
தென் இந்திய தலைவர்கள், பிராந்திய மனப்பான்மை கொண்டவர்கள் என்ற கருத்து வடமாநில தலைவர்களிடம் நிலவுகிறது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் வட இந்திய தலைவர் உயர்ந்த இடத்துக்கு வர தென்னிந்திய தலைவரான ஜெயலலிதா ஆதரவு அளித்து இருக்கிறார்.
மேலும் சங்மா கிறிஸ்தவ வேட்பாளர் என்பதால் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் மனப்பான்மையில் முதல்- அமைச்சர் இருப்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அரசியல் எதிரிகள் ஜெயலலிதா உயர்ந்த சாதிக்காரர் என்ற எண்ணத்தை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் சிறுபான்மை சமுதாயத்துக்கு எதிரானவர் அல்ல என்பதையும் நிரூபித்து இருக்கிறார். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கு ஆதரவு அளித்து இருப்பதும் வட இந்திய தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது என்றார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறையால் பாரதீய ஜனதா மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் சங்மாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கும்.
காங்கிரஸ் வேட்பாளரை இந்த கட்சிகள் ஒருபோதும் ஆதரிக்க முன்வராது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் முன் வந்துள்ளார்.
முலாயம்சிங் யாதவ் தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
பி.ஏ.சங்மாவை ஆதரிப்பீர்களா? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத் பவாரிடம் கேட்டபோது, நாங்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம். சங்மா எங்கள் கட்சி தலைவர் என்றாலும், காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்து இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார்.
லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டதற்கு, எல்லோரும் எங்கள் நண்பர்கள்தான். என்றாலும் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரைத்தான் ஆதரிப்பேன் என்றார்.
No comments:
Post a Comment