சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, பா.ஜனதா சார்பில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என்று, சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 106 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசை கண்டித்தும், சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு, சுஷ்மா சுவராஜ் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் தமிழகம் வந்த அவர், படுகொலை செய்யப்பட்ட இரு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.
இந்த நிலையில், மீண்டும் 106 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-
"இலங்கை படையினரால் இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்படுவது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை பாதிக்கும். இலங்கையில் அமைதியும், வளமும் பெருக வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள், இரு நாட்டு உறவில் பதற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் விடுவிப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். இந்திய மீனவர்களுக்கு எதிரான கொடுமையை பா.ஜனதாவோ, இந்திய அரசோ பொறுத்துக்கொள்ளாது''.
இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இதுவரை தமிழன் பிரச்சனைகள் தேசிய அளவில் பெரிதாக பேசப்பட்டது இல்லை. நமது பிரச்சனைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கான பெரிய சக்திகள் இல்லை என்பதே காரணம். ஒரு சீமானுக்கா? ஒரு பழ. நெடுமாறனுக்கா அந்த அளவுக்கு மத்திய அரசியோ அல்லது இந்தியதேச மக்களையோ தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் சக்தி இல்லை என்பதை விட அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுப்பட வில்லை என்பதே எனது கருத்து. ஒரு மாநில அரசை சாடுவதற்கும் அவர்களை இவர்கள் பக்கம் திருப்புவதற்கும் வேண்டுமானால் இவர்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கலாம். ஆனால் தேசிய அளவில் இவர்களின் செயல் பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தவல்லதல்ல. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தலைமைக்காகவும், கூட்டணிக்காகவும் உணர்வுகளை அடக்கி கொண்டு பேசாமல் மௌனம் காக்கவே செய்தனர். இதன் விளைவுகளே நாம் இழந்த இழப்புகள். நமக்காக குரல் கொடுக்க ஒரு தேசிய கட்சி முன்வராதா என்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழனிடமும் இருந்து கொண்டு தான் இருந்தது.
அந்த ஏக்கத்தை, அந்த எதிர் பார்ப்புகளை சரி செய்யும் விதமாக அண்மைய காலமாக பாரதியஜனதா கட்சியின் தலைமை தமிழன் பிரச்சனையை தனது கையில் எடுத்து போராட துவங்கி உள்ளது பாராட்டப்பட வேண்டியது. மதவாத கட்சி என்றாலும், அவர்கள் நமக்காக போராட முன் வரும் போது நாமும் அவர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் நாம் ஒவ்வொருவரு அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து 'தந்தி' அனுப்புவோம் இது அவர்களை நமது பிரச்சனைகளில் இன்னும் அதிக அக்கறையோடு ஈடுப்படவைக்கும்.
தமிழக மீனவனுக்காக குரல் கொடுக்க முன் வந்திருக்கும் இந்தியாவின் முக்கிய தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் ஒவ்வொரு தமிழனின் சார்பாகவும் "விழியே பேசு.." தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
தமிழக மீனவனுக்காக குரல் கொடுக்க முன் வந்திருக்கும் இந்தியாவின் முக்கிய தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் ஒவ்வொரு தமிழனின் சார்பாகவும் "விழியே பேசு.." தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

No comments:
Post a Comment