இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்தும், தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகும், மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்ககோரியும் நாகையில் இன்று (22-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடிகர் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
நாகை காடம்பாடி சாலையில் உள்ள வி.டி.பி. கல்லூரி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு விஜய்யின் தந்தையும், மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார். நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியையும் வழங்கி பேசுகிறார். இதற்காக இன்று மதியம் பொள்ளாட்சியில் இருந்து கார் மூலம் திருச்சி, தஞ்சை வழியாக விஜய் நாகை வந்தார்.
பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் கல்லூரி மைதானத்துக்கு சென்றார். கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை ராணுவத்தை கண்டித்து விஜய் கோஷம் எழுப்ப ரசிகர்களும், பொதுமக்களும் கோஷம் போடுகிறார்கள். அதன் பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விஜய் கண்டன ஆர்ப்பாட்டம், நடை பெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இன்று காலை முதலே நாகையில் குவியத் தொடங்கி விட்டனர்.
திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட ரசிகர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். திருச்சி மாவட்ட தலைவர் ராஜா தலைமையிலும், இளைஞரணி மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் ஆயிரம் வாகனங்களில் ரசிகர்கள் இன்று காலை புறப்பட்டு சென்றனர். நாகையில் பல ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்த வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் ரசிகர்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கும் ஆர்ப்பாட்டமாக அமைந்து உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் கார் மூலம் நடிகர் விஜய் பொள்ளாச்சி செல்கிறார்.
விஜய் கார் செல்லும் வழியெங்கும் ரசிகர்கள் ஏராளமான பேனர்கள், பிளக்ஸ்கள் வைத்து உள்ளனர். அதில் கடல், பின்னணியில் தமிழக மீனவர்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய் படங்களும், ஜெயலலிதாவை சந்தித்த விஜய் படங்களும் அதிகம் பிரசுரித்து உள்ளனர்.
No comments:
Post a Comment