திருவண்ணாமலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,
மற்ற மாநிலங்களில், மனிதனை மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா இன்றைக்கும் இருக்கிறதே, கலைஞர் வந்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டில் மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்து, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா திட்டம் கொண்டு வந்தார். அதுதான் மனித நேயம். எனவே நம்முடைய எதிர்காலத்திற்கு, வாழ்வதற்கு பெரிய வாய்ப்புகள் கொடுக்கும் கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா?
இந்தத் தேர்தலை, மக்கள் தேர்தல் களமாகப் பார்க்கவில்லை. இனப்போராட்ட களமாக, திராவிடர் ஆரியர் போராட்டமாகக் கருதுகிறார்கள். அதை எங்களைப் போன்றவர்கள் உணர்கிறோம். இது ஸ்ரீக்கும், திரு-வுக்கும் போராட்டம், பரம்பரைப் போராட்டம். ஏனென்றால் அவர்கள் தங்கள் பரம்பரையைத் தேடிப் போய் இருக்கிறார்கள்.
உழைக்கின்ற, பாட்டாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மறுக்கப்பட்டு இருந்ததை மாற்றி, திராவிடர் சமுதாயம் மூலம் ஒரு வளர்ச்சியை, எழுச்சியை பெற கலைஞர் அரசு பாடுபட்டுக்கொண்டு வருகிறது. சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.
தேர்தல் என்பது இது ஒரு கட்சிப் பிரச்சனை அல்ல. மதப் பிரச்சனை அல்ல. மாறாக நம் இனத்தின் வாழ்க்கை பிரச்சனை இதில்தான் நம் இனம் வாழ்வதா? வீழ்வதா? என்ற நிலை அடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில்தான் அனைத்து மக்களும், சிறுபான்மை மக்களுடன் உறவுக்காரர்கள் போன்று செயல்பட்டு, பழகிக்கொண்டு இருக்கிறோம். இதுபோல் வேறு நாட்டில் உண்டா. வேறு மாநிலத்தில்தான் உண்டா. மக்களிடையே வெறுப்பை தூவுவதற்கு, தூண்டுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் வருகிறது.
திராவிடர் இயக்கம் வளர்ந்தால், சிறுபான்மை சமுதாயமாக இருந்தாலும், பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், எல்லோரும் கைகோத்துக்கொண்டு சகோதரர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மிகப்பெரிய ஒற்றுமையாளர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலை மற்ற அமைப்புகள் வந்தால் தொடராது. எனவே, கலைஞர் தலைமையில் உள்ள அணி வெற்றி பெறுவது யாருடைய சுயநலத்திற்காகவும் அல்ல. தமிழ் இனத்தின் மீட்புக்காக, எதிர் காலத்திற்காக. இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

No comments:
Post a Comment