ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அடுத்த வாரம் டில்லியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தரவுள்ள விருந்துக்கு பிறகு தான், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, முக்கிய தலைவர்களுடன் இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தையை, சோனியாவே நடத்துவார் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கடந்த மார்ச் 12ம் தேதி, பார்லிமென்ட் கூடி மார்ச் 30ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஆரம்பித்து தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா நிறைவேற்றங்கள் என, எல்லா முக்கிய அலுவல்களும் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த வாரம் செவ்வாய் கிழமையோடு பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையவுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்த கையோடு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்ட, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
விருந்து:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாம் முறையாக மன்மோகன் சிங் தலைமையில் பதவியேற்று வரும் 22ம் தேதியுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் வைத்து விருந்து அளிக்கவுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், இந்த விருந்து நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவத்தை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து தான், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது நிஜ ஆட்டத்தை காங்கிரஸ் துவக்கவுள்ளது.
வேறு பெயர் இல்லை:
காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த ஒரு பெயரையும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்களே முன்னிலையில் இருக்கின்றன. ஊடகங்களில் அடிபடும் இந்த பெயர்களை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவோ, மறுக்கவோ செய்யாமல், வெறுமனே ஆழம் பார்த்து வருகிறது. இந்நிலையில், இவர்களைத் தவிர வேறு பெயர்கள் எதுவும் காங்கிரஸ் தரப்பில் இல்லையெனத் தெரிகிறது. காங்கிரஸ் யாரை நிறுத்தினாலும், அந்த நபரை மம்தா பானர்ஜி, முலாயம் சிங், மாயாவதி என, அரசை ஆதரவு தரும் முக்கிய கட்சிகள் ஆதரிக்கும் சூழலே உள்ளது.
நேரடியாக பேச்சு:
எனவே, ஏற்கனவே ஊடகங்களில் அடிபடும் பெயர்களைத் தவிர, புதிதாக வேறு யாராவது ஒருவர் முன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஏற்கனவே அரசை ஆதரிக்கும் குட்டிக் கட்சிகளின் தலைவர்கள், சுயேச்சைகள் ஆகியோரை வரவழைத்து நேரடியாக பேசி, ஆதரவை சோனியா கேட்டு முடித்து விட்டார். தி.மு.க., திரிணமுல் போன்ற கூட்டணிக் கட்சிகளிடம் பிரதிநிதிகளை அனுப்பி வெள்ளோட்டப் பேச்சை முடித்துள்ள நிலையில், அந்த தலைவர்களிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நேரடியாக சோனியாவே நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் அனேகமாக இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ நடக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி வருவாரா?
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பங்கேற்பர். இம்முறை ஜனாதிபதி தேர்தலும் சேர்ந்து கொண்டுள்ளதால், அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங், மாயாவதி ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவிர, இந்த விருந்து நிகழ்ச்சிக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி வரும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை. உடல்நிலை ஒத்துழைத்தால், அவரது டில்லி விஜயம் சாத்தியமே. தவிர ஜாமினில் வெளிவந்துள்ள ராஜாவை சென்னைக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பதால், இந்த விருந்து சந்தர்ப்பத்தை வைத்து கருணாநிதி, டில்லி வந்து ராஜாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment