தானே புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு செய்த தாசில்தார் அனந்தராமன் குறித்து ஆதாரத்துடன் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து புகார் அளித்தார். இதையடுத்து அந்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தமிழகத்தை மட்டும் இன்றி புதுச்சேரியையும் தானே புயல் புரட்டிப் போட்டது. இதில் பலரது வீடுகள் தரைமட்டம் ஆனது.
தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5,000ம், பகுதியாக பாதித்த வீடுகளுக்கு ரூ.2,500ம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் பண்ருட்டி நகராட்சிக்கு ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வார்டு வாரியாக கணக்கெடுத்து, நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் வழங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக அனைத்து கட்சியினர் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற ஆதாரத்துடன் தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சேகர் ஆகியோர் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்து தாசில்தார் அனந்தராமன் மீது புகார் கொடுத்தனர்.
கலெக்டர் நடத்திய விசாரணையில், புயல் நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பண்ருட்டி தாசில்தாராக பணிபுரிந்த (தற்போது கடலூர் மாவட்ட அரசு கேபிள் டிவி தனி தாசில்தார்) அனந்தராமனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment