(இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)
கையிலிருக்கும் ரெண்டு ரூபாயை வச்சுகிட்டு சனிக்கிழமை வரை எப்படி சமாளிக்கிறதுன்னு சங்கருக்கு ஒரே குழப்பம்.
இன்னும் நாலு நாள் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சாப்பிட வேணாமா..?
இங்கு மனுஷனுக்கு தான் ஒரு வேளை சாப்பிடுவதே பெரும் பாடா இருக்கு. இதே பணக்காரன் வீட்டு நாய்க்கு கூட தினம் மூணு வேளையும் தடபுடலான விருந்து தான்!
வசதி படைத்தவன் வீட்டு நாயை விடவும் கேவலமாக போனது ஏழை மனிதன் வாழ்க்கை. என்று ஒளியும் இந்த ஏற்றத்தாழ்வுகள்.....?
சங்கர் தீர்மானித்து விட்டான் தினம் ஒரு வேளைத்தான் சாப்பாடு என்று. ஆனால், அந்த ஒரு வேளையும் எப்போது சாப்பாடை வைத்து கொள்வது என்பது தான் பெரிய கேள்வியானது.
"சாப்பாட்டை(!) ராத்திரியே வசுகிடலாம் ஜெகதி. வயித்திலே கொஞ்சமாவது இரை இருந்தால் தான் ராத்திரி தூங்க முடியும்"-சங்கர்.
சங்கரை சங்கடமாக பார்த்த ஜெகதி "உம்...." -என்று தலையாட்டினாள்.
மற்ற கூலியாட்கள்யெல்லாம் சோத்து பாத்திரம் திறந்து சாப்பிட தொடங்க சங்கரும் ஜெகதீஸ்வரியும் வழக்கம் போல் பச்சை தண்ணி குடிச்சிட்டு பசியோட அவங்க சாப்பிடுறதை வேடிக்கை பார்த்தார்கள்.
'பெற்றால் தான் பிள்ளையா..?' ன்னு சொல்லுவாங்க அது மாதிரி தான் இதுவும். சாபிட்டாத்தான் பசி தீருமா என்ன சாப்பிடுறத பார்த்தாலும் தான்.....!!
ராத்திரி எட்டணாவுக்கு அஞ்சு இட்டிலி (அப்ப 1 இட்டிலி 10௦ காசு) வாங்கி நாம பகிர்ந்துப்போம்"-ஜெகதீஸ்வரியிடம் கேட்டான் சங்கர்.
"உங்களுக்கு மூணு...எனக்கு ரெண்டு!"-ஜெகதி
"அது சரியில்லே!! ஆளுக்கு பாதி பாதி!"-சங்கர்.
"ம்ஹூம்! வேலை பார்க்கிற ஆளு நீங்க...சொல்லப்போனா அஞ்சுமே நீங்கதான் சாப்பிடணும்"-ஜெகதி.
ரெண்டு பேருமே சண்டை போட்டாங்க. இதுவும் சாப்பாட்டு சண்டை தான் ஆனா, இந்த சண்டையில் ரெண்டு பேரோட பாசமும் இருந்துச்சு. ஒருவர் மேல ஒருவர் வச்சிருக்கிற காதலோட ஆழம் தெரிந்தது.
சங்கரும் ஜெகதியும் சண்டை போடுவதை தூரத்திலிருந்து கவனிச்சிட்டு இருந்த சண்முகம் பெரியவர் இவர்கள் பக்கத்தில் வந்தார். இவர்களை பார்த்து கேலியாக கேட்டார்.
"வேலை பார்க்கிற இடத்துக்கு பொண்டாட்டிய கூட்டி வரியே ...எதுக்கு சங்கர்? உனக்கு துணைக்கா?"
"இல்லண்ணே அவளுக்கு துணைக்கு"-சங்கர்.
"வீடு எங்கப்பா இருக்கு"-பெரியவர்.
"வீடு....வீடு...."- சங்கர் சொல்ல தயங்கினான்.
"என்னப்பா நான் உன் வீட்டுக்கு சாப்பிட வரமாட்டேன், தைரியமாக சொல்லு"-சங்கரிடம் வேடிக்கையாக சொன்னார் .
"இல்லண்ணே...வீடு இல்லே...! "-சங்கர்.
"என்னடா...சொல்லுற! பொண்டாட்டிய வசுகிட்டு எங்கேடா...தங்குற. காலம் கிடக்க கேட்டுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணானா என்ன பண்ணுவ"-பாசமாக கடிந்து கொண்டார்.
சங்கர் வீடு வாசல் இல்லாம இருக்கிறது தெரிஞ்சதும் சைதாப்பேட்டையில் இருக்கிற தன்னோட வீட்டுக்கு சங்கரை கூப்பிட்டார் பெரியவர் சண்முகம்.
"சைதாப்பேட்டையிலே என் வீடு இருக்கு. அங்கே உங்களுக்கு ரூம் ஒதுக்கி தரேன்! மாசம் இருபது ரூபாய் வாடகையை உன் சம்பளத்திலிருந்தே பிடிச்சுக்கிறேன்! எனக்கு கல்யாண வயசிலே மூணு பெண்கள் இருக்காங்க. உன் மனைவிக்கு ஒரு பாதுகாப்பும் ஆச்சு" சண்முகம்.
அதன்படியே தங்க நிழல் கொடுத்தார். உடனடியா. தேவைப்படற அரிசி பருப்பெல்லாம் வாங்கி கொடுத்தார்.
"முதல்ல...சமைச்சு சாப்பிடுங்க" என்று சொன்னார் பெரியவர் சண்முகம்.
சங்கருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
"ஐயா...நீங்க என் அப்பா மாதிரி! என் வாழ்க்கைக்கு நீங்க தான் இனி எல்லாமே" சங்கர்
பின்னாளில் சண்முகம் பெரியவரோட மூணு பெண்ணுக்கும் சங்கர் தன்னுடைய செலவிலேயே கல்யாணம் செய்து வைத்தான்.
இதை இப்போது சொல்வது எதற்குன்னா சங்கர் மிருகமா மனிதனான்னு எடை போடுறதுக்கு அவனுடைய எல்லா செயல்களையும் தராசுலே வைக்க வேண்டியது இருக்குல்லையா....!

No comments:
Post a Comment