செங்குன்றம் அருகே நடந்த அதி.மு.க. பொதுக்கூட்டத்தில், 10 மணிக்கு மேல் பேசியதால் நடிகர் ஆனந்தராஜுக்கும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பாக அ.தி.மு.க. பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் பி.கார்மேகம், பசும்பொன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில தேர்தல் பிரிவுசெயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், மாவட்ட பேரவைச் செயலாளர் பி.வி.ரமணா ஆகியோர் கலந்து கொண்டு 306 ஏழைகளுக்கு இலவச சேலைகளையும், 5 பெண்களுக்கு தையல் எந்திரங்களையும், வெட் கிரைண்டர்களையும், வழங்கினார்கள்.
இறுதியாக தலைமை கழகப் பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் பேசிக்கொண்டிருந்தார். இரவு 10 மணி ஆனவுடன் செங்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கூட்டத்தை ஏற்பாடு செய்த ராஜேந்திரனிடம் கூட்டத்தை முடிக்க சொல்லி கேட்டுக்கொண்டார்.
ஆனால் தொடர்ந்து ஆனந்தராஜ் பேசிக்கொண்டிருந்தார். இரவு 10.10 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மேடை அருகே சென்று நடிகர் ஆனந்தராஜிடம் பேச்சை நிறுத்திக்கொள்ளும்படி கூறினார்.
அதற்கு ஆனந்தராஜ், "இதேபகுதியில் நடக்கும் பிற கட்சிக்கூட்டங்களுக்கு மட்டும் 10 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று போலீசார் கெடுபிடி செய்வதில்லை'' என்றார்.
ஆனால், உடனே கூட்டத்தை முடித்துக்கொள்ளும்படி போலீசார் மீண்டும் வலியுறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் நடிகர் ஆனந்தராஜூக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் கூச்சல் போட்டனர். மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி கேட்டுக்கொண்டதின் பேரில் 10.15 மணியளவில் ஆனந்தராஜ் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

No comments:
Post a Comment