தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம், நாகை மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நாகை, ராமேசுவரம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் தற்போது வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மீனவர்கள் 120 பேர் 29 படகுகளில் 5 - ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சிங்கள கடற்படை ரோந்து கப்பல் அங்கு வந்தது. அதில் இருந்த சிங்கள கடற்படையினர் வேதாரண்யம் மீனவர்களை இரும்பு கம்பி, ரோப் கயிற்றால் சரமாரி தாக்கினார்கள். மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடித்து கொண்டிருந்த வெற்றி வேலன், தேவதாசன், பக்கிரி சாமி, இளங்கோவன், வெற்றி ஆகியோரை தாக்கினார்கள்.
மேலும் படகின் முன் பகுதியிலும் உருட்டு கட்டையால் அடித்தனர். இதில் மீனவர்கள் காயம் அடைந்தனர். படகும் சேதம் அடைந்தது. இதே போல் கோதண்டபாணி என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடித்து கொண்டிருந்த வேலவன், மகேஷ், கார்த்திக், மணிகண்டன் ஆகியோரை தாக்கி படகையும் சேதப்படுத்தினார்கள்.
இதனால் பயந்து போன மற்ற மீனவர்கள் அவசரமாக இன்று அதிகாலை கரைக்கு திரும்பினார்கள். இதே போல் சிங்கள கடற்படை தாக்கிய மீனவர்களும் கரைக்கு வந்து சேர்ந்தனர். நாகை, வேதாரண்யம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment