தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய ராணுவ அமைச்சர் ஏகே அந்தோணி் தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவ வீரர்கள் 2 பேர் வெலிங்டனில் பயிற்சி பெற்று வருவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்களை உடனே திருப்பி அனுப்பக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். ஆனால் அவர் கடிதம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் திமுக எம்.பி. கனிமொழி இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இலங்கை ராணுவ வீரர்கள் 2 பேருக்கு தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது உண்மையே. இலங்கை உள்ளிட்ட நமது அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது வழக்கமான ஒன்று தான் என்றார்.
தமிழகதத்தில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூர், பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயற்சி அளிக்கப்படுவதாக ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment