வானிலை ஆராய்ச்சி மையம் வானிலையை முன்கூட்டி தெரிவிப்பதன் மூலம் அதைத் தெரிந்து மக்கள் அதற்கு ஏற்ப அந்த நாளை திட்டமிட்டு செய்வார்கள்.
இந்த வசதியை இன்னும் மேம்படுத்தி மக்கள் பயன் அடைவதற்கான கருத்தரங்கு சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் பிராந்திய அலுவலகம் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்தரங்கை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை டைரக்டர் ஜெனரல் எஸ்.எஸ்.ரத்தோர் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வானிலை என்பது மிக முக்கியமாக உள்ளது. பொதுமக்களுக்கு, குறிப்பாக கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் வானிலையை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
சமுதாய வானொலிகள் மற்றும் எப்.எம்.ரேடியோ மூலம் வானிலையை அவ்வப்போது மக்களுக்கு தெரிவிக்க அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் அடிக்கடி வானிலை நிலவரத்தை மக்கள் தெரிந்து பயன்அடையலாம்.
செல்போனில் வானிலை தொடர்பான புதிய சாப்ட்வேரை பதிந்து கொண்டால் செல்போனில் அவ்வப்போது முன்கூட்டியே வானிலையை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தானாக எஸ்.எம்.எஸ். போல வானிலை பற்றிய தகவல் வந்துகொண்டே இருக்கும். இந்த வசதியும் விரைவில் வரும். தற்போது மாநில அளவில் மழை அல்லது வெயில் பற்றி இப்போது அறிவிக்கப்படுகிறது. இனிமேல் வட்டார அளவில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
இந்திய வானிலைக்கான இணையதளத்தில் தற்போது மறுநாள் வானிலை மட்டும் இருக்கும். ஆனால் அடுத்த 3 மணிநேரத்திற்கு என்ன வானிலை என்ற அறிவிப்பை இனிமேல் வானிலைக்கான இணையதளத்தில் காணலாம். இந்த வசதி வருகிற வடகிழக்கு பருவமழை காலத்தில் வந்துவிடும். இது மக்களுக்கு அதிக பயனை அளிக்கும்.
இவ்வாறு வானிலை டைரக்டர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர் பேட்டி அளித்தார்.
முன்னதாக கருத்தரங்கில் எல்.எஸ்.ரத்தோர் பேசியதாவது:-
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் கடந்த 10 வருடங்களில் பல நவீன தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. டாப்ளார் வானிலை ரேடார் கருவிகள் ஏராளமான எண்ணிக்கையில் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 625 இடங்களில் தானியங்கி வானிலை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 850 தானியங்கி மழை அளக்கும் மையங்கள் செயல்படுகின்றன. இவை செயற்கைகோள் வசதியுடன் செயல்படுகின்றன. நிறைய நவீன கருவிகள் அனைத்து பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் எஸ்.பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார் நிறுவப்பட உள்ளது. அதற்காக 8 ஏக்கர் நிலம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதுபோல காரைக்காலிலும் எஸ்.பேண்ட் டாப்ளர் ரேடார் நிறுவப்பட உள்ளது.
இவ்வாறு வானிலை டைரக்டர் ஜெனரல் எல்.எஸ்.ரத்தோர் பேசினார்.
கருத்தரங்கில் தமிழக அரசின் வருவாய் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் யதீந்திரநாத் ஸ்வைன், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இயற்கை பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் ஜெயராமன், வானிலை துணை டைரக்டர் ஜெனரல் ஒய்.இ.ஏ.ராஜ், வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர்கள் எஸ்.ஆர்.ரமணன், உதவி வானிலை அதிகாரி கு.வை.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினார்கள்.
No comments:
Post a Comment