பிரகாஷ்ராஜும், லலிதாகுமாரியும் விவகாரத்து செய்து பிரிந்து வாழ்கிறார்கள். பிரகாஷ்ராஜ் 2-வதாக இந்திப்பட டான்ஸ்மாஸ்டர் போனி வர்மாவை மணந்து குடித்தனம் நடத்துகிறார்.
கடந்த வாரம் “பயணம்” படத்தை ரிலீஸ் செய்வதில் பிரகாஷ் ராஜுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.அப்போது லலிதாகுமாரி தனக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் சொத்துக்களை கோர்ட்டில் பணையமாக வைத்து படம் வெளிவர உதவினார். இதற்காக லலிதாகுமாரிக்கு பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் கணவர் பிரகாஷ்ராஜுக்கு உதவ எப்படி மனம் வந்தது என்று லலிதாகுமாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
விவாகரத்துக்கு பிறகு என் வாழ்க்கை அமைதியாக செல்கிறது. கோபம், வெறுப்பெல்லாம் என்னிடம் இல்லை. பிரகாஷ்ராஜுக்கு “பயணம்” படத்தை ரிலீஸ் செய்வதில் பண பிரச்சினை இருப்பதாக தெரிய வந்தது. அவருக்கு என் சொத்துக்களை பிணையமாக வைத்து உதவ முடிவு செய்தேன்.
இந்த சொத்துக்கள் எல்லாமே சில வருடங்களுக்கு முன்பு அவரால் எனக்கு தரப்பட்டவை. அதை அவருக்கு திருப்பி கொடுத்துள்ளேன். எனக்கும், குழந்தைகளுக்கும் எப்போதும் அவர் தேவையாக இருக்கிறார். பிறருக்கு உதவுவது என்பது மனித பண்புதான். நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. விவாகரத்துக்கு பிறகும் கூட நானும், பிரகாஷ் ராஜும் குழந்தைகள் தேவைகளுக்காக அடிக்கடி தொடர்பில் இருக்கிறோம்.
பிரகாஷ் ராஜுடன் கலந்து பேசாமல் குழந்தைகள் சம்பந்தமான எந்த முடிவையும் நான் எடுப்பது இல்லை. நான் ஒருமுறை வெளியூர் சென்றபோது கூட குழந்தைகளை பிரகாஷ்ராஜ் வீட்டில் விட்டு விட்டுத்தான் சென்றேன். அவர்கள் கவனமாக பார்த்துக் கொண்டனர்.
கணவனுக்கும், மனைவிக்கும் பிரிவு வரலாம். ஆனால் குழந்தைகள் தந்தையை விட்டு பிரிக்கப்படக் கூடாது. யாரும் தங்கள் முன்னாள் கணவர்களை எதிரியாக பார்க்க கூடாது. நாங்கள் இப்போது பிரிந்து இருக்கலாம். ஆனால் 14 வருடங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து இருக்கிறோம்.
இவ்வாறு லலிதாகுமாரி கூறினார்.

No comments:
Post a Comment