தன்னிடம் நடனம் கற்க வரும் மாணவிகளிடம், ரோமியோக்கள் ஈவ்டீசிங் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை ஷோபனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
'தளபதி, 'எனக்குள் ஒருவன்', 'இது நம்ம ஆளு' போன்ற பிரபல தமிழ்ப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஷோபனா (வயது 42). மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி இவரது அத்தை. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீமன் சீனிவாசா ரோட்டில் வசிக்கிறார்.
நேற்று நடிகை ஷோபனா தனது நடனப்பள்ளி மாணவி ஒருவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.
ஷோபனாவிடம், என்ன புகார் மனு கொடுத்தீர்கள் என்று, நிருபர்கள் கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல், ஷோபனா கண்கலங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில்,
"நான் எனது வீட்டில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். 200 மாணவிகள் என்னிடம் நடனம் கற்று வருகிறார்கள்.
ஆனால் எனது நடனப் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு பெரும் தொல்லை கொடுக்கும் வகையில், எனது வீடு அருகில் இருக்கும் நடமாடும் டீக்கடைக்கு, டீ சாப்பிட வரும் இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.
இதைக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது வீட்டுக்குள் அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். எனது மாணவி ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள்.
பிரச்சினைக்குரிய அந்த டீக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment