தமிழகத்தில் என்ன
நடக்கிறது என்று எதுவுமே எனக்கு தெரியாது என்று சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர்
விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர்
விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூர்
உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. இதையடுத்து, தனது மகன் படப்பிடிப்பில் கலந்து
கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி விஜயகாந்த் மலேசியா சென்றார்.
இதையடுத்து, மலேசியாவில்
10 நாட்களுக்கு மேலாக சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு
சிங்கப்பூரில், சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சென்னை திரும்பினார் விஜயகாந்த்.
இதற்கிடையே, தமிழக
சட்டசபை கூட்டம் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பிய விஜயகாந்த்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள்,
’4ஆம் தேதி கூடவுள்ள சட்டசபை கூட்டத்தில் தேமுதிகவின் செயல்பாடு எப்படி இருக்கும்?
எத்தகைய மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள்’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த
விஜயகாந்த், ”ஒருமாத காலமாக செய்தித்தாள் எதையும் படிக்கவில்லை. தொலைக்காட்சியும் பார்க்கவில்லை.
எனவே, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று எதுவுமே எனக்கு தெரியாது. சட்டமன்ற கூட்டத்திற்கு
இனிமேல் தான் தயார் செய்ய வேண்டும்” என பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment