நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பேசிய போது அவரது பிரசார வாகனத்தின் மீது கல்வீசினார்கள்.
இதே போன்று நேற்று அவர் மதுரை மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அலங்காநல்லூரிலும் அவர் வேன் மீது கல்வீசப்பட்டது.
நேற்று மாலை வாடிப்பட்டியில் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அலங்காநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார். ஊருக்குள் நுழையும் இடத்தில் யாரோ மர்ம கும்பல் அவரது வேன் மீது சரமாரியாக கற்களை வீசியது. இதில் வேனின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. ஆனால் வேனில் பயணம் செய்த வடிவேலு உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே வேனில் நின்றபடி, பா.ம.க. வேட்பாளர் இளஞ்செழியனுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசும்போது,
நான் ஊருக்குள் வரும்போது, யாரோ மர்ம நபர்கள் இருட்டுக்குள் இருந்து என் வேன் மீது கற்களை வீசிவிட்டு தப்பிவிட்டனர்.
தைரியம் இருந்தால் கற்களை வீசியவர்கள் வெளிச்சத்தில் வந்து மோதிக்கொள்ள தயாரா? தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் 6-வது முறையாக முதலமைச்சராக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் அனைவரும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடவேண்டும் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து ஊமச்சிகுளம் பகுதியில் அவர் பிரசாரம் செய்தார்.
இதனிடையே நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்ட தகவல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ராகார்க்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment