நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) கடந்த 30 நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாய நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக என்எல்சி விரிவாக்கம் செய்தபோது படிப்படியாக கடந்த 20 ஆண்டில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு நிலக்கரி வெட்டும் பணி, கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை எடுத்து சென்று மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லுதல் மற்றும் ஆபரேட்டர் பணியாகும்.
இவர்கள் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம், என்எல்சி ஒப்பந்த தொமுச, ஒப்பந்த பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ ஒப்பந்த சங்கம் என பல்வேறு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் 5 ஆயிரம் உறுப்பினர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்ப்பது, படிப்படியாக பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி 2010ம் ஆண்டு 39 நாள் தொடர் போராட்டம் நடத்தினர். மீண்டும் டெல்லியில் நடந்த முத்தரப்பு பேச்சில் முடிவு எட்டப்பட்டது. 2 வருடத்தில் 480 நாட்கள் பணி முடித்த அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என மீண்டும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்களை ஒப்பந்த தொழி லாளர் சங்கத்தினர் போ ராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது பல கட்ட பேச்சு தோல்வியில் முடிந்து, போராட்டம் 30வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே என்எல்சி நிர்வாகம், தற்காலிகமாக புதிய தொழிலாளர் களை பணியில் ஈடுபடுத்தி யது. பணியில் போதிய அனுபவம் இல்லாததால் இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். நிரந்தர ஊழியர் தொழிற் சங்கமும் போராட்டத்தில் குதித்து உள்ளதால் என்எல்சியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
லட்சம் டன் நிலக்கரி காலி: ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது ஒரு லட்சம் டன் நிலக்கரி இருப்பில் சேமித்து வைக்கப்பட்டது. தினமும் 6 ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன் வரை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் அனைத்து காலியாகி விட்டது. தற்போது நிரந்தர தொழிலாளர்களை கொண்டு நிலக்கரி வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கவில்லை என என்எல்சி நிர்வாகம் கூறியுள்ளது. திடீரென மழை பெய்ததால் சுரங்கத்தில் நீர் சேர்ந்து மின்வெட்டும் பணி பாதிப்பாகும். ஆனால் நெய்வேலியில் கோடை மழையும் பெய்யவில்லை.
2490 மெகாவாட் உற்பத்தி: நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தில் இருந்து 600 மெகாவாட், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் இருந்து 420 மெகாவாட், 2ம் அனல்மின் நிலையத்தில் இருந்து ஆயிரத்து 470 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி அனைத்தும் பெங்களூர் மத்திய தொகுப்புக்கு(கிரீடு) சென்று அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. போரா ட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தென் மாநிலங்களுக்கு வினியோகம் தடை படும் அபாய நிலை ஏற்படும் சூழல் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
No comments:
Post a Comment