குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள 6,566 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் 1958ம் ஆண்டு நெய்யாறு இடதுகரை சானல் அமைக்க இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதனையடுத்து 1965ல் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 1970 வாக்கில் பணிகள் நிறைவு பெற்று தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது.
தமிழகம் மற்றும் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியே இருந்து வந்ததால் இதுதொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை. 2004ம் ஆண்டு வரை தண்ணீர் வழங்கிய கேரளா அதன் பின்னர் தண்ணீர் வழங்குவதை நிறுத்திவிட்டது. 2005ம் ஆண்டு முதல் கேரள சட்டசபையில் அனுமதி பெற்றே தண்ணீர் வழங்க முடியும் எனக்கூறி விட்டது.
இதனால் குமரி விவசாயிகள் தண்ணீர்விட இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அனைத்து கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித பயனுமில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசும் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மூலம் பலமுறை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கேரளம் பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்து வந்தது.
இறுதியாக தமிழகம் கால்வாய் மற்றும் அணை பராமரிப்பிற்கு தேவையான நிதி தரவேண்டும். தண்ணீருக்கும் பணம் தரவேண்டும் எனக்கூறியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கிடையே தண்ணீர் வழங்கப்பட்டாலும் இதுவரை எந்த மாநிலமும் தண்ணீருக்கு பணம் கேட்டது இல்லை.
இந்நிலையில் பராமரிப்பிற்கு தமிழக அரசு பராமரிப்பு நிதியை வழங்கத் தயார் என்ற போதிலும் கேரளா இதுவரை தண்ணீர் வழங்காமல் போக்குகாட்டி வருகிறது. இந்த கால்வாயில் 3 டி.எம்.சி தண்ணீர் தேவை என்ற நிலையில் ஒரு டி.எம்.சி அளவில் மட்டுமே தரமுடியும் எனவும் அதற்கும் பணம் வேண்டும் என ஒருபுறம் தகவல் பரவினாலும் இதுபற்றி அதிகார பூர்வமாக கேரளம் எதனையும் தெரிவிக்காமல் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது.
நீதிமன்றம் செல்ல முடியுமா?
தமிழகம் , கேரளம் இடையே ஒப்பந்தம் இருந்தால் அதனை வைத்து உச்ச நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றிருக்க முடியும். ஆனால் முல்லைப்பெரியாறில் தனது உரிமைகளை விட்டு கொடுத்தது ஏமாந்தது போல் இதிலும் ஒப்பந்தம் இல்லை என்பதால் நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தனைக்கும் நெய்யாறு நீர்பிடிப்பு பகுதி தமிழகத்திலும் உள்ளது. மேலும் நெய்யாறு இடதுகரை சானலில் கேரளத்திற்கு செல்லும் நீர் தமிழகத்தில் சிறிது தூரம் வந்து பின்னர் கேரளா செல்கிறது. இதனை தமிழகம் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திட்டம் என்ன
கேரளாவிடம் கையேந்தாமல் மாற்றுத்திட்டங்களை செயல்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி குமரி மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது:
* திற்பரப்பு அருவியிலிருந்து 8 கி.மீ தூரத்திற்கு கால்வாய் அமைத்து தாமிரபரணி ஆற்றின் ஒரு பகுதியை திருப்பிவிடலாம்.
* முல்லையாற்றில் பள்ளிகூட்டம் பகுதியில் தடுப்பணை அமைத்து அரை கி.மீ தூரமே உள்ள நெய்யாறு இடது கரை கிளை கால்வாயில் தண்ணீரை ரிவர்ஸ் முறையில் திருப்பிவிடலாம். (இத்திட்டத்தை குறைந்த செலவில், விரைவில், எளிதில் செயல்படுத்த முடியும்)
* தாமிரபரணி ஆற்றிலிருந்து மின்சார நீரேற்றங்கள் (சம்ப்) அமைத்து தண்ணீரை விடலாம்.
40 சதவீதம் தமிழக தண்ணீர்
இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ கூறியதாவது: விளவங்கோடு தொகுதியின் ஒரே நீராதாரம் கருத்தையாறு. நெய்யாறு அணைக்கு 40 சதவீதம் தண்ணீர் இங்கிருந்துதான் செல்கிறது. விவசாயத்திற்கு மட்டுமின்றி இதர தேவைகளுக்கும் தண்ணீர் தேவையிருப்பதால் மனிதாபிமானம் மற்றும் மனசாட்சிப்படியும், கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியபடி இந்த கால்வாயில் தண்ணீர் விடவேண்டும்.
தற்போது தண்ணீர் விட்டால் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் விரிசலாகியுள்ள இருமாநில மக்களிடையே மீண்டும் நல்லுறவு ஏற்பட அடித்தளமாக இருக்கும். வழக்கு, கேரள எதிர்ப்பு எதுவும் இந்த கால்வாயில் தண்ணீர் விடுவதில் இல்லை என்பதால் உடனடியாக தண்ணீர் விடவேண்டும். இதன்மூலம் குறைந்தது 5 லட்சம் மக்கள் நேரடி பயன்பெறுவார்கள்.
No comments:
Post a Comment