விருதுநகர் மற்றும் மாமத்தூர் பகுதியில் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தே.மு.தி.க. வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாரியம்மன் கோவிலில் இன்று அக்னி சட்டி விழா நடக்கிறது. விருதுநகர் என்றதும் எனது சிறுவயது பிராயம் நினைவுக்கு வருகிறது. எனது தாயார் ஊர் விருது நகர் அருகே உள்ள கெட்டி லிங்கம்பட்டி, தந்தை ஊர் ராமநாதபுரம். நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் தான். அப்போது பங்குனி திருவிழாவிற்கு மாட்டு வண்டி கட்டி வருவோம்.
விருதுநகர் புகழ் புரோட்டாவுக்கும் சிக்கனும் தான். திருநெல்வேலியில் இருந்து வந்தாலும் விருதுநகர் வந்து தான் சாப்பிடுவேன். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த புண்ணிய பூமி. கல்வி கண் திறந்தவர் காமராஜர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் கல்வி கண்ணை கெடுத்துள்ளனர். விருதுநகர் வானம் பார்த்த பூமி. தொழிற்சாலைகள் இல்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இங்கு அமைச்சராக இருக்கிறார்.
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் வீடும், தியேட்டரும் இருப்பதால் ரெயில்வே மேம்பாலம் கட்ட தடை செய்கிறார். அவரது கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்ற 5 எழுத்து எம்.ஜி.ஆர். தந்தது. எம்.ஜி.ஆர். புகழ் பாடியவர் இன்று தி.மு.க. பின் செல்கிறார். கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்றார். மந்திரிகள் வாங்கிய நிலத்தை பறித்து ஏழைகளுக்கு கொடுப்பாரா? நான் தி.மு.க.வையும், கருணாநிதியையும் திட்டுகிறேன் என்று கூறுகிறார்கள். கருணாநிதிக்கும், எனக்கும் பங்கு சண்டையா? வாய்க்கால் வரப்பு சண்டையா? பெண் கொடுத்து எடுத்திருக்கிறேனா? ஆளும் கட்சியை திட்டதான் வேண்டியுள்ளது.
நல்ல ஆட்சி தந்திருந்தால் திட்ட வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சி சுதந்திரம் வாங்கி தந்தது என்று கூறுகிறார்கள். அது ஊழல் நிறைந்துள்ளது. விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கதாகூர் கடந்த 2 ஆண்டுகளில் என்ன செய்து உள்ளார்? ஒன்றும் செய்ய வில்லை. என்னை ஆயிரம் கோடி கொடுத்தாலும் மக்களிட மிருந்து பிரிக்க முடியாது.
எந்த சக்தியாலும் உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது. நான் பணத்தை நம்பி இல்லை. உங்கள் மனதை நம்பி உள்ளேன். விருதுநகரில் இன்று புனிதமான நாள். பங்குனி பொங்கல் திருவிழா நடக்கிறது. அந்த மாரியாத்தா பாண்டியராஜனை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment