நெய்வேலி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகனுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் சிவசுப்பிரமணியனுக்கும் கடும்போட்டி இருந்தது. இந்த தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் 2 வாக்குச் சாவடிகள் (எண்-55, 56) அமைக்கப்பட்டிருந்தன.
இந்த 2 வாக்கு சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் இடமான கடலூருக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் புகுந்தது. தேர்தல் அதிகாரிகளை தள்ளிவிட்டு தடி மற்றும் இரும்புக்கம்பிகளால் 2 வாக்குப்பதிவு எந்திரங்களையும் உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
போலீசார் சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 50 பேரை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை வழிமறித்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் நாளை (15-ந் தேதி) மறுவாக்குப் பதிவு நடக்கிறது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் கூறியதாவது:-
நெய்வேலி தொகுதியில் சமட்டிக்குப்பம் வாக்குச் சாவடியில் நேற்று இரவு 7 மணி அளவில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரணி சட்டமன்ற தொகுதி பாரதியார் தெருவில் உள்ள புனித வளனார் பள்ளியில் 164-வது வாக்கு சாவடி மையத்தில் 1150 ஓட்டுகள் உள்ளது. இந்த வாக்கு சாவடியில் மதியம் 1 மணி வரை 458 ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. அதன்பிறகு பொதுமக்கள் பலர் வந்து ஓட்டுபோட்டனர். மாலை 5 மணிக்கு பணியாளர்கள் மின்னணு எந்திரத்தில் ஆப் செய்த போது 458 ஓட்டு பதிவாகி இருப்பதாக 1 மணி நிலவரத்தையே காட்டியது. இந்த வாக்கு சாவடியில் மறு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கும்.

No comments:
Post a Comment