லோக்பால் மசாதாவுக்கான வரைவுக் குழுவின் முதல் கூட்டம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் அண்ணா ஹசாரே கலந்து கொண்டார்.
ஒன்றரை மணி நேரம் நடந்த இக் குழுக் கூட்டத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டது. எனினும், விடியோ எடுக்கப்பட வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித், அன்னா ஹசாரே, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய 10 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவின் அடுத்த கூட்டம் மே 2ம் தேதி நடைபெறும்.
ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொத்துக் கணக்கை வெளியிட்ட ஹசாரே:
இந் நிலையில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே தனது சொத்து கணக்கை வெளியிட்டுள்ளார்.
அதே போல லோக் பால் மசாதாவுக்கான வரைவுக் குழுவின் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சொத்து கணக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, அன்னா ஹசாரேக்கு சொந்தமாக 2.53 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 2.46 ஏக்கர் நிலத்தை கிராம மக்களுக்கு தானமாகக் கொடுத்து விட்டார். மீதம் உள்ள 0.07 ஏக்கர் நிலத்தை மட்டுமே தானும் தனது குடும்த்தினரும் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவரிடம் வங்கியில் மொத்த இருப்பு ரூ.67,188ம் கையில் ரொக்கம் ரூ.1,500ம் உள்ளது.
வழக்கறிஞர் சாந்தி பூஷணுக்கு ரூ. 209 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவருக்கு எவ்வளவு சொத்து இருந்தது என்ற விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பிரசாந்த் பூஷணுக்கு ரூ.2.2 கோடி சொத்து உள்ளது. நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவுக்கு வங்கிக் கணக்கில் ரூ.30 லட்சம் , பெங்களூர் ரிச்மண்ட் டவுனில் ரூ.1.5 கோடி, ரூ.30 லட்சம் வீட்டு கடன் உள்ளது.
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள பிளாட் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இக் குழுவில் உள்ள அமைச்சர்கள் தங்களது சொத்து விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment