குஜராத்தின் காந்தி நகர் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
இது வளர்ச்சிக்கான முதல்வர் என்று அன்னா ஹஸாரே போன்றவர்களால் பாராட்டப்பட்டு வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்குக் கிடைத்த முதல் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது குஜராத் மாநிலம். 1995க்குப் பிறகு பாஜக ஆதிக்கத்துக்குப் போனது இந்த மாநிலம். இன்றுவரை அங்கு காங்கிரஸ் தலையெடுக்க முடியவில்லை. குறிப்பாக நரேந்திர மோடி முதல்வரான பிறகு, காங்கிரஸ் அங்கு இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் குஜராத் மாநில தலைநகரான காந்தி நகர் முனிசிபாலிட்டிக்கு முதல் முறையாக நேற்று தேர்தல் நடந்தது.
மொத்தம் 33 சீட்கள் (11 வார்டுகள்- ஒரு வார்டுக்கு 3 சீட்கள்) கொண்ட இந்த நகராட்சியின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 18 இடங்களை வென்று நகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. பாஜகவுக்கு 15 இடங்கள் கிடைத்தன.
5 வார்டுகளில் காங்கிரஸ் மொத்த சீட்களையும் வென்றது. 7வது வார்டில் 2 சீட்களையும், 9வது வார்டில் 1 சீட்டையும் வென்றது காங்கிரஸ்.
குஜராத் காங்கிரஸ் தலைவராக முதல் முறை பொறுப்பேற்ற அர்ஜூன் மோத்வாடியாவுக்கு இது மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. காந்தி நகரின் பாஜக தலைவராக இருந்த பிரவீண் பட்டேல், தனக்கு எம்பி சீட் கிடைக்காத கோபத்தில் காந்தி நகரைக் கோட்டை விட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் நரேந்திர மோடி சூரத்தில் இருந்தார். அவர் இதுவரை கருத்து எதுவும் சொல்லவில்லை.

No comments:
Post a Comment