கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து பத்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜேப்பியார் என்ஜீனியரிங் கல்லூரிக்கான அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்ய தமிழக அரசுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஹனீஸ் சாப்ரா வெளியிட்டுள்ள அறிக்கை
காஞ்சீபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
கடந்த 6-8-2012 அன்று இக்கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் கட்டும்போது, 40 அடி உயர சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இக்கட்டுமானம் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அதில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவகுரு, நகர் மற்றும் ஊரமைப்பு துணை இயக்குனர் தங்கராஜ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்(ஊராட்சி) துளசிசிங், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி டாக்டர் வீரப்பன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
அந்த அறிக்கை அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தை மீறி தன்னிச்சையாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் முறைகேடான வகையிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இடிந்து விழுந்த கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் தரம் குறைந்த கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்டு உள்ளது என்றும், முறையான கியூரிங் செய்யப்படவில்லை என்றும், இதுபோன்ற சிக்கலான கட்டுமானங்களை போதுமான அனுபவம் இல்லாத பணியாளர்களை கொண்டு கட்டியது இந்த விபத்துக்கு காரணம் என்றும் இந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
எனவே மேற்கண்ட தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு கல்லூரி நிர்வாகத்தின் முறையற்ற செயல்பாடு காரணம் என்று கருதி முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களின் உறுதியினை ஆய்வு செய்யவும், ஆய்வறிக்கையின் அடிப்படையில் அக்கட்டிடங்களை கல்லூரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் குழு பரிந்துரை செய்து உள்ளது.
இப்பரிந்துரையின் அடிப்படையிலும் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், முழுமையான ஆய்வுக்கு பின் வகுப்புகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கலாம் எனவும் மாவட்ட கலெக்டர் ஹனீஸ் சாப்ரா, சென்னை கோட்டையில் உள்ள உயர்கல்வித்துறை முதன்மை செயலருக்கு பரிந்துரை செய்து உள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார் ஆட்சித் தலைவர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யபப்பட்ட ஜேப்பியார் இன்னும் சிறையில் அடைபட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல ஜியோன் பள்ளி பேருந்தில் பயணித்து அதில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து மாணவி ஸ்ருதி பலியான சம்பவத்தில் கைதான பள்ளித் தாளாளர் விஜயனும் சிறையில்தான் தொடர்ந்து அடைபட்டிருக்கிறார்.
அதேசமயம், சென்னை கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி.பிக்குச் சொந்தமான பத்மா சேஷாத்திரி பள்ளியில் நீச்சல் குளத்தில் மாணவன் மூச்சுத் திணறி பலியான விவகாரத்தில் கைதான அத்தனை பேருமே சில மணி நேரங்களிலேயே விடுதலையாகி வெளியே வந்து விட்டனர், அந்த வழக்கம் அப்படியே அமுங்கிப் போய் விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment