ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டியில் 137 ரன்களை சேஸ் செய்த புனே வாரியர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கடைசியில் 34 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீண்டும் தங்கள் பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய 2வது போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
துவக்க வீரரும் கேப்டனுமான கம்பிர் 1 பவுண்டரி அடித்து 10 ரன்கள் எடுத்து ஆஷிஸ் நெஹ்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலிஸ் 13 ரன்களில் கிளார்க் பந்தில் போல்டானார். அதன்பிறகு துவக்க வீரர் மெக்கல்லம், சாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மோதுவாக உயர்த்தினர். மெக்கல்லம் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜெஸ்ஸி ரைடரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதிரடிக்கு மாறிய சாகிப் அல் ஹசன் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 42 ரன்கள் எடுத்த போது, புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மனோஜ் திவாரியும், யூசுப் பதானும் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 136 ரன்களை சேர்த்தது.
137 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய புனே வாரியர்ஸ் அணிக்கு துவக்கம் முதலே தடுமாற்றம் ஏற்பட்டது. துவக்க வீரர் ராபின் உத்தப்பா 8 ரன்களை எடுத்து மனோஜ் திவாரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் 13 ரன்கள் எடுத்து மெக்கல்லமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு பொறுப்பாக ஆடி வந்த ஜெஸ்ஸி ரைடர் யூசுப் பதான் பந்தில் போல்டானார்.
அணி வெற்றி பெற கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கங்குலி 5 ரன்கள் எடுத்து எல்.பி.டபில்யூ ஆனார். அதன்பிறகு வந்த வீரர்களான மஞ்சும்தர்(17), காலம்(12), ஹர்பிரீத் சிங்(6), பார்னல்(3) ஆகியோர் வரிசையாக அவுட்டாகி வெளியேறினார்.
20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 102 ரன்களை எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 34 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது.

No comments:
Post a Comment