"பிரணாப் முகர்ஜி தானா காங்கிரஸ் வேட்பாளர் என்பதும் கூட, இன்னும் தெளிவாகவில்லை. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும், தனது வேட்பாளர்கள் யார் என்பதை, இன்னும் அறிவிக்கவில்லை. இந்த இரு அணிகளும், முதலில் ஒரு முடிவுக்கு வந்து, தத்தமது வேட்பாளரின் பெயர்களை அறிவிக்கட்டும். அதன் பிறகு, ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு எங்களின் ஆதரவு என்பதை, நான் அறிவிக்கிறேன்' என்று, மாயாவதி கூறியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதி, அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி.,யாகியுள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு, முதன் முறையாக, நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
சமாஜ்வாதி மீது தாக்கு:
அப்போது, அவர் உத்திர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி குறித்து, சரமாரியாக விமர்சனங்களை அடுக்கினார். அவர் கூறுகையில், "சமாஜ்வாதி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இன்னும் ஓராண்டிற்குள், இந்த ஆட்சியின் லட்சணங்களை, மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று, நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஓராண்டு காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று, இப்போது தெரிந்துவிட்டது. இரண்டே மாதங்களுக்குள், சமாஜ்வாதி கட்சியின் அலங்கோல ஆட்சியை பார்த்து, மக்கள் வெறுத்துப் போகும் நிலைமை உருவாகியுள்ளது. பகுஜன் சமாஜ் ஆட்சியின் அருமையை, மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.
ஏமாற்றத்தில் மக்கள்:
சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்த உ.பி., வாக்காளர்கள் அனைவரும், மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். தேர்தலின் போது அளித்த ஏமாற்று வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற, புதிய அரசால் இயலவில்லை. வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குண்டர்களும் ரவுடிகளும் தலைதூக்கும் மாநிலமாகி விட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என, பழையவை அனைத்தும் தலைதூக்கிவிட்டன.
சீர்குலைவு:
பகுஜன் சமாஜ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை சீர்குலைத்து விட்டனர். தலித் விரோதப் போக்கு என்ற ஒன்றே கொள்கையாகிவிட்டது. ஆட்சி நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு குடும்பம் மட்டுமே கோலோச்சும் மாநிலமாகி விட்டது. குடும்ப உறுப்பினர்கள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கின்றன. காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த புனியாவுக்கு, பகுஜன் சமாஜ் ஆட்சியில் தலைமைச் செயலர் என்ற மிக முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டது. தலித்துகளுக்கு நல்லது செய்வார் என்று பார்த்தால் எதையும் செய்யவில்லை. மாறாக, அவர் இப்போது, நேரு குடும்பத்து சிந்தனாவாதியாகிவிட்டார். என் மீதும், எனது கட்சியினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. ஆதாரமற்றவை. பாரபட்சமற்ற விசாரணையை சந்திக்கத் தயார். காங்கிரசும், பா.ஜ.,வும் சட்டசபைத் தேர்தலின் போது எடுத்த நிலைப்பாடுகளே, எங்களது தோல்விக்கு காரணம். இல்லையெனில், உலகில் எந்த சக்தியாலும் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு திரும்ப வருவதை தடுத்திருக்க முடியாது' என்று கூறினார்.
பின், நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மாயாவதி பதிலளித்தார். ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு,"தற்போதைய சூழ்நிலையில், இதற்கு பதிலளிப்பது சரியாக இருக்காது. எங்கள் கொள்கைக்கும், இயக்கத்திற்கும் தோதான வேட்பாளருக்கே ஆதரவு தரப்படும். இப்போதைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என இரண்டும், என்ன செய்கின்றன என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். யார் தத்தமது வேட்பாளர் என்பதை, இரு அணிகளும் அறிவிக்கட்டும். இந்த அணிகள் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை காத்திருந்து விட்டு, அதன் பிறகு எங்களது முடிவை அறிவிக்கிறோம்' என்றார்.
தெளிவாகட்டும்:
பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு, "காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தானா என்பதே தெரியவில்லை.அதுவே, இன்னும் தெளிவாகவில்லையே' என்றார். பிஜு ஜனதா தளமும் அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ள முன்னாள் சபாநாயகரும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்களா என்று கேட்டபோது, "அவரது பெயர் முன்னிறுத்தப்பட்டுள்ளதை, பத்திரிகைகள் வாயிலாகவே அறிந்து கொண்டேன். இன்னும் நேரம் உள்ளது. சூழ்நிலைகள் முழுமையடையட்டும். அதன் பிறகு, நாங்கள் முடிவு செய்து அறிவிக்கிறோம்' என்றார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஐந்து ஆண்டு காலம் முழுமையாக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்விக்கு, "மதவாத சக்திகளை தடுப்பதற்காகவே, மத்திய ஆட்சியை வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் ஆதரிக்கிறது. இந்த ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா, கவிழுமா, கவிழாதா என்பதை எல்லாம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment